எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, July 8, 2026

Ramanujar-4

 ராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். உறங்காவில்லிதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டவர். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார். 16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் நடத்த பல்வேறு சமயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, கொன்றுவிடவும் திட்டமிட்டார். இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன்பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர். பின் விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்ரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார்.


அப்போது ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் காஞ்சிபுரம் சென்று ராமானுஜரை சந்தித்தார். வைஷ்ணவத்தை வளர்க்க ஒரு மகான் கிடைத்துவிட்டார் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திற்கு வரும்படி ராமானுஜரிடம் ஆளவந்தார் கேட்டுக்கொண்டார். ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஆளவந்தாரின் உடல்நிலை மோசமானது. அவர் தனது சீடர் பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை உடனடியாக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவரும்படி செய்தார். பெரியநம்பி காஞ்சி சென்று ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அதேநாளில் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார். ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன. அங்கு வந்த ராமானுஜரின் பழைய குருவான யாதவபிரகாசர், மாணவன் என்றும் பாராமல் ராமானுஜரின் கால்களில் விழுந்தார். தன்னைக் கொல்ல முயன்றவர் என்றும் பாராமல் அவருக்கு  கோவிந்தஜீயர் பட்டத்தை வழங்கினார் ராமானுஜர். எதிரியையும் நட்புடன் நடத்திய பெருமைக்குரியவர் ராமானுஜர். சிறிது காலம் கழித்து அவர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வூர் பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக தங்களை காட்டிக்கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.

இந்த அளவுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்து உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் எங்கும் பரவியது. வைஷ்ணவம் எங்கும் பரவியது. இவ்வளவும் இருந்தது போக, அவருக்கு ஒரு குறையும் இருந்தது. அது தான் நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது. இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார். ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார். ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. 17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத்தை புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உறக்க கத்தினார். இதனால் ஆத்திரமடைந்து நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாக கருதும்படி செய்தார். பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே திருநாடு (பெருமாள் திருவடி) எய்தினார். இப்போதும் உடையவரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.


pdf credit to - gopalavallidasar

text credit to - dinamalar

Ramanujar-3

 ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜர் அவதரித்த, 1,000மாவது ஆண்டு விழா 2017-2018 ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ராமனுஜரின் திருமேனியை பருவ நிலைக்கு ஏற்ப பல நுாறு ஆண்டுகளாக பாதுகாக்கும் ரகசியத்தை இந்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.


ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, ராமானுஜர், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆந்திர மாநிலம் திருப்பதி, கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைதிருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து, ஆன்மிக பணிகளிலும் சமய சீர்திருத்த பணிகளையும், வைணவத்தை தழைத்தோங்கச் செய்ய, விசிஷ்டாத்வைதம் என்ற உயரிய கோட்பாட்டையும் வகுத்து தந்தார்.பல கோவில் கோட்பாடுகளையும், பூஜை முறைகளையும் வகுத்து தந்தார். சிறந்த மகானாகவும், தலைச்சிறந்த வைணவ ஆச்சாரியராகவும் திகழ்ந்தார்.

ராமானுஜர் பற்றி பிற்கால தலைமுறையினர் அறிய, அவர் வாழ்ந்த காலத்திலேயே ராமானுஜர் போல, இரண்டு உற்சவ விக்ரங்களை பிரதிஷ்டைச் செய்தனர். அவற்றுள் ஒன்றை, ராமானுஜர், ஆரத் தழுவி தன் உடலில் இருந்த ஆத்மசக்தி முழுவதையும் அதில் பிரதிஷ்டை செய்தார்.இந்த திருமேனி, தானுகந்த திருமேனி (ராமானுஜரே மிகவும் உகந்த திருமேனி) என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று மற்றொரு திருமேனியை திருநாராயணபுரத்தில் பிரதிஷ்டைச் செய்தனர். அது, தமக்குகந்த திருமேனி , அதாவது, அடியார்கள் மிகவும் உகந்த திருமேனி என, அழைக்கின்றனர்.ராமானுஜர், 120 ஆண்டுகள் வாழ்ந்து, இறுதியாக ஸ்ரீரங்கத்தில் ஜீவித காலத்திற்கு பின் அவருடைய திருமேனியை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது, தானான திருமேனி என, அழைக்கப் படுகிறது.

வெந்நீர், போர்வை, சந்தனம்... ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராமானுஜர் திருமேனி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், மூலம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அவதார திருநாள் தொடங்கி, தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் அன்று, ஸ்ரீ கூரத்தாழ்வாரின் அவதார தினம் வரை உள்ள இடைப்பட்ட மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில், ராமானுஜரின் உற்சவ திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யும் போதும், திருவாராதனம் செய்யும் போதும், வெந்நீரை உபயோகிக்கின்றனர்.மேலும், அந்த காலங்களில், இரவு நேரங்களில் ராமானுஜரின் திருமேனிக்கு குளிராமல் இருப்பதற்கு, சால்வைகள், ரஜாய் எனப்படும் போர்வைகள் சாற்றப்பட்டு மிகவும் பாதுகாக்கின்றனர். இதேப்போல் கோடை காலத்தில் மிகவும் குளிர்ந்த, துாய்மையான நீரில் திருமஞ்சனம் செய்கின்றனர்.அதிக வெப்பம் உள்ள காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் சூட்டை தணிக்க, அவருடைய திருமேனியின் பின்புறம் சந்தனம் பூசப்படுகிறது. இந்த மரபு, தொடர்ந்து பல நுாறு ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக போற்றி பாதுகாத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

தானுகந்த திருமேனி: இந்தியாவில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் ராமானுஜரின் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படுகிறது. இதில் இந்த இரண்டு திருமேனி விக்ரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.இவை தொடர்ந்து பல வருடங்களாக வழிபட்டு,பாதுகாக்கப்படுகின்றன. இதில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த தானுகந்த திருமேனியை வைணவ அடியார்கள், கோவில் கைங்கர்யகாரர்களும், பல நுாறு ஆண்டுகளாக மிகவும் பாதுகாப்பாக பாதுகாத்து வருகின்றனர்.


pdf credit to - gopalavallidasar

text credit to - dinamalar

Ramanujar-2

 ஒருநாள் ராமானுஜர் திருப்பதி மலை அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, மோரு வாங்கலீயா மோரு என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. ஓர் குலப் பெண்மணி தலையில் மோர்ப்பானையைச் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஆனால் குருநாதரிடம் சொல்லவும் தயக்கம். எனவே ஆசையை அடக்கிக்கொண்டு பாடத்தில் கருத்தாக இருந்தனர். மோர்க்காரப் பெண்மணிக்கு இவர்கள் பாடம் படிப்பது தெரியவில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி, ஐயா... சாமி.... நல்ல மோரு ஒரு தடவை குடிச்சீங்கன்னா தெம்பா இருக்கும். உஷ்ணமெல்லாம் ஓடிப்போயிடும் என்று சொன்னபடி மோர்ப்பானையை இறக்கி வைத்தாள். ஏற்கனவே பசியிலும், அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர்ப்பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு எனக்கு, எனக்கு என்று வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்தில் பானை காலி. பிறகு மோர்க்காரி சீடர்களையும், ராமானுஜரையும் பார்த்தாள்.


அப்போது அவள் மனதில் இவர்களைப் போல நாமும் பக்தியில் திளைக்க வேண்டும் என்று எண்ணம் உண்டாயிற்று. திடீரென்று அப்படி பக்தி உணர்வு எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அப்போது ராமானுஜர் அவளிடம், நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன? என்று கேட்டார். முதலில் காசு ஆசை இருந்த அவள் மனது இப்போது வேறுவிதமாக மாறி இருந்தது. ராமானுஜரை பக்தியுடன் பார்த்து, காசெல்லாம் வேணாம் சாமி. அதை வைச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன் என்றாள். அப்படீன்னா காசுக்குப் பதிலா பொருள் ஏதாவது வேணுமா? என்று கேட்டார் சீடர் ஒருவர். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், எனக்கு காசும் வேணாம், பொருளும் வேணாம்... பெருமாளை அடையணும், மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க, சந்தோஷமா போயிடுவேன் என்றாள்.

ராமானுஜர் வியப்புடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்ற ஆசை எப்படித் தோன்றியது? இந்தக் கோரிக்கையை ராமானுஜரே எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு கவலைப்படாதேம்மா.... உன் நல்ல குணத்திற்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும், போய் வா என்றார். ஆனால் அந்தப் பெண்மணி விடவில்லை. உங்க வாக்கு பலிக்கட்டும் சாமி. அந்த மோட்சம் கிடைக்கிறதுக்கு வழியைக் காட்டுங்க. போய்ச் சேர்றேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். பிறகு அவளிடம் நீ நினைப்பது போல் மோட்சத்திற்கு வழிகாட்டுவதற்கோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ, இங்கு கூடியிருக்கும் சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கிறானே ஒருவன்..... ஏழுமலைக்குச் சொந்தக்காரன்.... அவன் கிட்ட போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத்தான் உண்டு என்றார்.  இதற்குப் பிறகும் மோர்க்காரப் பெண்மணி நகருவதாக இல்லை. அவள், சாமி மேலே இருக்கிற பெருமாள்கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும். மோட்சம் வேணும்னு கேட்டேன். ஆனா அவர் வாயைத் தொறந்து பேசமாட்டேங்கிறாரே என்றாள் கவலையுடன்.

அப்படி இல்லம்மா, அவளுக்கு என்ன வேலை இருக்கோ... அதை குறையா வெச்சுக்காதே... நீ விடாமல் கேட்டுக் கொண்டே இரு.... நிச்சயம் ஒரு நாள் மோட்சம் கொடுப்பார் என்றார் ராமானுஜர். இல்லீங்க சாமி, ஒங்களைத்தான் நம்பறேன் என்றாள். இவள் ஏதோ தீர்மானத்துடன் இருக்கிறான் போலிருக்கிறதே என்று யோசித்தார் ராமானுஜர். பிறகு அந்தப் பெண்மணி சாமி எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள் கிட்ட சிபாரிசு செஞ்சு ஓலை எழுதித் தரணும். உங்களை மாதிரி பெரியவங்க கொடுத்தாதான் பெருமாள் சாமி கேட்பாரு என்றாள் தெளிவாக. இதற்கு மேலும் மறுக்க முடியாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். சீடர்களுக்கு வியப்பு தாங்கவில்லை. குருநாதர் கேட்டபடி கொண்டு வந்து கொடுத்தனர். ராமானுஜர் மேலே அண்ணாந்து பார்த்து ஏழுமலையானை மனதால் இருகரம் கூப்பி வணங்கி முகவரி எழுதும் இடத்தில் வெங்கடேசப் பெருமாள், திருமலை என்று குறிப்பிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதி, தன் கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார்.

ஓலையை வாங்கிய அடுத்த விநாடியே, அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் சிபாரிசு கடிதத்தைக் கொடுத்தாள். அர்ச்சகர்கள் குழப்பத்துடன் இது என்ன ஓலை? என்று கேட்டனர். மோர்க்காரப் பெண்மணி முழு விவரத்தையும் கூறினாள். அர்ச்சகர்கள் ராமானுஜர் கொடுத்த ஓலை என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் பெருமாளின் காலடியில் சமர்ப்பித்தனர். ராமானுஜரின் சிபாரிசை ஏற்றுக் கொண்ட பெருமாள் வானில் இருந்து புஷ்பக விமானத்தை விஷ்ணு தூதர்களுடன் அனுப்பி மோர்க்காரியை வைகுண்டத்திற்கு அழைத்து வரச் செய்தார். உடையவர் உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சமத்தை உணர்த்துகிற சம்பவம் இது. தெய்வபக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது.


pdf credit to - gopalavallidasar

text credit to - dinamalar