இதுவரை :- சிவபெருமான் முன்னிலையில் தனது
அற்புதங்களை செய்து காட்ட கோரக்கர் தயாரான
போது, அவருக்கு முன்னதாக அற்புதம் நிகழ்த்திய மச்சமுனிவரை காணவில்லை.
இனி... 9. சாமர்த்தியமாக தப்பித்த மச்சமுனிவர்
மரணமில்லா வாழ்வு தரும் மூலிகையின் ரகசியத்தை
தெரிந்து, கொள்வதற்காக அரக்கர்களால் மச்சமுனி கடத்தப்பட்டார். அரக்கர் குலத்
தலைவர் சுக்கிராச்சாரியின் உத்திரவின் பேரில் அரக்கர்களின் குழு தலைவன் ஒருவன்
அவரை கடத்தினான்.
கடத்தப்பட்ட மச்சமுனியை அரக்கர் குழு தலைவன்
பாதாள லோகத்திற்குள் கொண்டு சென்றான். அப்போது அவனுடன் சுக்கிராச்சாரியாரும்
சேர்ந்து கொண்டார். மச்சமுனி இதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யவில்லை. பதிலுக்கு
மவுனமாக இருந்து அவர்களை வேடிக்கை பார்த்தார்.
மச்சமுனிவரைப் பார்த்து சுக்கிராச்சாரியார்
கேட்டார்......
“அரக்கர் குலத் தலைவன் வந்திருக்கிறேன். எங்கள்
அரக்கர் குலம் தழைக்க அந்த காயகல்ப உயிர் காக்கும் மூலிகைகளை எங்களுக்கும் காட்டி
விடு. உன்னை விட்டு விடுகிறேன்...“
இல்லையென்றால்...... “ – மச்சமுனி கேட்டார்
இதே பாதாள லோகத்தில் கடைசி வரை, இருக்க
வேண்டியது தான். உன்னைக் காப்பாற்ற யாராலும் முடியாது “.
இதைக் கேட்டதும் மச்சமுனிவர் கடகடவென்று
சிரித்தார்..
“எதற்காக சிரிக்கிறாய்?”
“அரக்கர் குலத்திற்கு சிறிதும் புத்தி என்பது
கிடையாது என்பது அகில உலகமும் அறியும். சுக்கிராச்சாரியாருக்கு கொஞ்சமாவது புத்தி இருக்கும்
என்று நினைத்தேன். அதுவும் பொய்த்து விட்டது. அதனை நினைத்து சிரித்தேன்” என்றார் மச்சமுனி.
“அதிகமாகப் பேசாதே. நீ இப்பொழுது என்னுடைய கைதி”
“சுக்கிராச்சாரி... இன்னமும் அதே தவற்றைச்
செய்கிறாய்... நான் உனது கைதி அல்ல. நீதான் என்னுடைய கைதி”..., “அரக்கர் குலத் தலைவனான என்னை முக்கண்ணனே மரியாதை
கொடுத்துத்தான் அழைப்பார். ஆனால் நீயோ என்னை ஒருமையில் அழைக்கிறாய். சித்தன்
என்பதால் உன்னை விட்டேன். இல்லையென்றால் இன்னேரம் என்னுடைய அரக்கர்கள் உன்னைக்
கண்டம் துண்டமாக வெட்டி தூக்கி எறிந்திருப்பார்கள்” என்று மச்சமுனிவரை கோபத்துடன் மிரட்டினார்
சுக்கிராச்சாரியார்.
........... மச்சமுனி சிறிது நேரம் யோசித்தார்..
முட்டாளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. இவனை
சித்து வேலையால்தான் வெல்ல வேண்டும்’ என்று
எண்ணினார். அதை செயல்படுத்தவும் செய்தார். கண்ணை மூடி கண் திறக்கும் முன்பு, தன்
முன்பு கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த மச்சமுனிவரை காணாத சுக்கிராச்சாரியாருக்கு
அதிர்ச்சி.,எங்கே போயிருப்பார் இந்த மச்சமுனி? என்று எண்ணியவர், அடுத்த வினாடியே, “பாதாளலோகத்து
வாசலை இழுத்து மூடுங்கள், மச்சமுனிவரைக் தேடிக் கண்டுபிடியுங்கள். அவனைத் தப்பிக்க
விடாதீர்கள்...” என்று தன்
அரக்கர்களுக்கு ஆணையிட்டார். சல்லடை போட்டு சலித்துப் பார்த்தும் பாதாள லோகத்தில்
இருந்த மச்சமுனிவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாதாள லோகத்தில் தீ வைத்து விட்டால், அந்த
வெப்பம் தாங்காமல் மச்சமுனி எந்த உருவத்தில் மறைந்து இருந்தாலும் ஓடிவந்து தன்,
காலில் விழுவான் என்று சுக்கிராச்சாரியாருக்குத் தோன்றியது. திடீரென்று அந்த எண்ணத்தை
மாற்றி, தீ பிடித்தால் மச்சமுனி தப்பினாலும் தப்பி விடுவான். ஆகவே பாதாளலோகத்தில்
தண்ணீரை வரவழைத்து அவனை திக்கு முக்காட வைக்கலாம்’ என்று அடுத்ததாக யோசித்தார் சுக்கிராச்சாரியார்.
பிறகுதான் சுக்கிராச்சாரியாருக்கு தெரிந்தது, ‘உயிர்
காக்கும் மூலிகையைக் கண்டுபிடித்த மச்சமுனிவன் எப்படியும் உயிர் தப்பித்து
விடுவான். ஆனால், நீருக்கும், நெருப்புக்கும் தனது பாதாளலோகத்து அரக்கர்கள் தான்
உயிர் துறக்க வேண்டியிருக்கும்’ என்று முடிவு
செய்தவர். அங்கும், இங்கும் அலைந்து கொண்டு, ‘மச்ச முனிவரை தப்பிக்க வைத்து
விட்டோமே....’ என்று
கவலைப்பட்டார்..
“இந்த முறை அவன் தப்பித்துப் போகட்டும்.
இன்னொரு தடவை என்னிடம் மாட்டிக் கொள்ளாமலா போகப்போகிறான்?” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
இருந்தாலும், மச்சமுனிவரை அவசரப்பட்டு பாதாள லோகத்திற்கு கடத்தி வந்திருக்கக்
கூடாது. சரி.. சரி ... இனி பூலோகத்திற்குச் சென்று அண்ணாமலையின் மீது நடக்கும்
சித்தர்களின் சித்து எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போமே.... என்று
முடிவெடுத்த சுக்கிராச்சாரியார், பாதாள லோகத்தை அடைத்திருந்த கல்லை எடுக்கச்
சொல்லிவிட்டு, ஒரு முனிவனைப் போல ஜடாமுனி வைத்து, மீசையும் – தாடியும்,
கமண்டலத்தோடும் பாதாள லோகத்தில் இருந்து வெளியே வந்தார்.
அண்ணாமலை உச்சியில் ‘கோரக்கர்‘ எதைப் பற்றியும்
கவலைப் படாமல் தனது சித்து வித்தையைக் காண்பித்துக் கொண்டிருந்தார்...
முக்கண்ணனாகிய அருணாச்சலேஸ்வரரும், அகத்திய முனிவரும்
காணாமல் போன மச்சமுனியைக் கண்டுபிடித்து பூலோகத்திற்கு கொண்டு வர தீவிரமாக
யோசித்துக் கொண்டிருந்தனர்.
கோரக்கருக்கு இது சற்று வருத்தத்தை அளித்தது.
சிவபெருமான் தன் சித்து வேலையைப் பார்க்காமல்
அகத்தியரோடு தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருக்கிறாரே....? இந்த அண்ணாமலை காட்டில்
பூமி வெடித்தது என்பதைப் பற்றியா? புகை மண்டலம் போல் எழுந்த புழுதியைப் பற்றியா?
அப்படியே நடந்தாலும் நொடிக்குள் மறுபடியும் அண்ணாமலை, இயல்பான நிலைக்கு வந்ததைப்
பற்றியா? என்றெல்லாம் யோசித்த கோரக்கர், நேராக அவர்கள் இருவரையும் நோக்கி வந்தார்.
கோரக்கர் வந்த வேகத்தை பார்த்த அகத்தியர், “கோரக்கர்
மிகவும் கோபத்தோடு வருகிறார். அவரை தாங்கள்தான் சமாதானம் செய்ய வேண்டும்” என்று அருணாச்சலேஸ்வரரிடம் வேண்டினார்.
“என்ன கோரக்கரே?” என்று சிரித்தபடியே வரவேற்றார் அருணாச்சலேஸ்வரர்..
“என்னை மன்றத்திற்கு வரச் சொல்லி விட்டு
அவமானப்படுத்தி விட்டீர்கள் நீங்கள் இருவரும்” . என்று குற்றம் சாட்டினார் கோரக்கர்.
“இல்லையே..... கோரக்கர் சற்று சினம்
கொண்டிருக்கிறார் போலும். ம்ம்...... இதோ என் சிம்மாசனத்திற்கு போகிறேன்...
அகத்தியர் பொறுப்போடு இந்த மலையில் சித்தர்களின் சித்து விளையாட்டு நிகழ்ச்சியை
மகிழ்ச்சியோடு நடத்துவார்” என்று
அருணாச்சலேஸ்வரர் கோரக்கரை சமாதானப்படுத்தி விட்டு தன் இருக்கைக்குச் சென்றார்.
அகத்தியருக்கு சற்று தர்ம சங்கடமான நிலை,
காணாமல்போன மச்சமுனி என்ன ஆனாரோ... அவரைக்
கண்டுபிடிக்க செல்ல முடியவில்லையே... என்று எண்ணினார். அதேநேரம், மச்சமுனிவர்
கடத்தப்பட்ட செய்தியை மற்ற சித்தர்கள் அறிந்தால், ஒரு சித்தர் கூட இங்கு
இருக்காமல் ஓடி ஒளிந்து கொள்வார்களே.. என்றும் வருந்தினார்.
‘சித்தர்களைக்
காக்கின்ற பொறுப்பு தலையாயச் சித்தனான எனக்கும் உண்டு. உலகின் முதல் சித்தனான
அருணாச்சலேஸ்வரருக்கும் உண்டு. இப்படிப்பட்ட இருவரும் கடமையில் இருந்து தவறலாமா?’ என்று அகத்தியர் சற்று கவலையோடு சிந்தித்த போது, கோரக்கர்
அகத்தியரிடம் நெருங்கி வந்தார்.
“என் சித்து வேலையை ஆரம்பிக்கட்டுமா?”.....
...... “தாராளமாக ஆரம்பியுங்கள் கோரக்கரே”
“தலையாயச்
சித்தரான தாங்கள் ஏதோ கவலையில் இருப்பதுபோல் தெரிகிறதே..” “அதெல்லாம்
ஒன்றுமில்லை கோரக்கரே, தாங்கள்.., தங்கள் சித்து வேலையை தொடங்கலாமே...”
“அகத்திய
மாமுனிவரே..... எல்லாவற்றையும் கடந்தவர் நீங்கள் தங்களுக்குத் தெரியாதது
ஒன்றுமில்லை... ஆனால்....”
“என்ன ஆனால்
கோரக்கரே.....”
“மனிதர்களோடு மனிதராக அடிக்கடிப்
பழகுவதால் தெரிந்தோ தெரியாமலோ தங்களுக்கும் அந்த தோஷம் பிடித்துக் கொண்டிருக்கிறது
இல்லையா?”
“இல்லை கோரக்கரே..”
“இல்லையென்றால்..... காணாமல் போன
மச்சமுனிவருக்காக தாங்கள் இப்படி கவலைப்பட வேண்டாம். இதோ ஒரு விநாடியில்
மச்சமுனிவரை நான் கண்டுபிடித்துத் தருகிறேன்” என்ற
கோரக்கர்......... “மச்சமுனி, .... மச்சமுனி...... என்று இருதடவை அழைத்தார்....
அடுத்த விநாடி.. .!
மாறு வடிவத்தில் வந்த
சுக்கிராச்சாரியாரின் ஜடாமுடியிலிருந்து பறந்து வந்த ஒரு வண்டு, மச்சமுனிவராக
மாறியது... அந்த மாபெரும் சபையின் முன்பு கம்பிரமாக அமர்ந்தார் மச்சமுனிவர்...
-
சித்தர்கள்...
ராஜநடையில் வருவார்கள்...!
No comments:
Post a Comment