தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடு டையசுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர் கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.1
முற்ற லாமையிள நாகமோ டேனமுளைக் கொம் பவைபூண்டு
வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன்
கற்றல் கேட்ட லுடை யார்பெரி யார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.
நீர்ப ரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தயின வெள்வளை சோரஎன் உள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய ஓரூரிது வென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 2
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே. 3
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே. 4
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே. 5
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.6
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப்
பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 7
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே. 8
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன் 9
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி,
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்,
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று,
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி! 10
உடையாள் உன்தன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்பதானால் அடியேன்உன்அடியார்
நடுவுள் இருக்கும் அரு ளைப்புரியாய்
பொன்னம்பலத்தெம் முடியா முதலே
என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 11
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி! பாகம் பெணுரு ஆனாய் போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! சீரார் திருவையாறா போற்றி!
உத்தரகோசமங்கைக்கு அரசே போற்றி போற்றி!
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி! இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி!
குவளைக் கண்ணி கூறன் காண்க! அவளுந் தானும் உடனே காண்க!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி! 12
ஆதியாம் சப்தரிஷிமார்களோடு அருள்பூண்ட பதினென்பேர் பாதம்போற்றி!
சேதியாம் மூத்ததொருமுனிவர் மூதோர் செப்பரிய பெரியோர்கள் சுகத்தாள் போற்றி!
நீதியாம் ரவியொடுமதியும் தேவர்நிலையான மூவருடன் இனணகள்போற்றி! ஜோதியென சென்னிமீதுஉறையும் கலைகள்ஓதுவித்த குருவடிகள் போற்றி!போற்றி!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 13
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.14
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.15
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்
மறைக்கப் பாலாய் எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமங்ற
சொன்னவரை நினையாம னினைந்து
பவத் தொடக்கை வெல்வாம். 16
No comments:
Post a Comment